Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச)
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திருச்சி மேற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் துரோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், மக்கள் விரோத ஆட்சியை மாற்றி நல்லாட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே என்.டி.ஏவின் நோக்கம் என தெரிவித்தார்.
திமுக அமைச்சர் கே. என். நேரு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை, நகராட்சி நிர்வாகத் துறையில் பணியமர்த்தல், ஒப்பந்தங்கள் மற்றும் பணியிட மாற்றங்களில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் அவர் விமர்சித்தார்.
மேலும், திருச்சி நகரின் வளர்ச்சி பின்னடைந்துள்ளதாகவும், முன்பு நாட்டின் சுத்தமான மாநகராட்சிகளில் முன்னிலை வகித்த திருச்சி தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் ராஜசேகரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து தமிழகத்தில் முன்னேற்றம் ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ