Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 17 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் மீது எழுந்த ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கடந்த 25.08.2025 அன்று, ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட 17 திட்டங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இதில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வராதது, இல்லாத நிறுவனங்களின் பெயரில் போலி பில்கள் தயாரித்து நிதி மோசடி செய்தது, ஒரே நபருக்கு இரட்டை ஊதியம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளிலும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த புகார்களுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊராட்சி மன்ற தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பனின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி, பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P