Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னையில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.3,000 அபராதம் விதித்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலை அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. விஜய் தனது பிரச்சார வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டுனர் ஹெல்மெட் அணியாமல், கைகளை விடுத்து ‘ரஜினி’ பாணியில் சாகசத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, கோட்டூர்புரம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஹெல்மெட் அணியாதது, ஆபத்தான ஓட்டம் (ரேஷ் டிரைவிங்), உடைந்த நம்பர் பிளேட் மற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
விசாரணையில், சாகசத்தில் ஈடுபட்டவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மனோத் குமார் என்பது தெரியவந்துள்ளது. விஜயை பார்த்த உற்சாகத்தில் இவ்வாறு செயல்பட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ