Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 17 ஏப்ரல் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11.92 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் 15.03.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 231, குளச்சல் சட்டமன்ற தொகுதி, 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதி, 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் ஒரே கட்டமாக 23.04.2026 அன்று நடத்தப்பட உள்ளது.
இதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 15,20,338 வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 13/4/2026 அன்று முதல் வாக்காளர் தகவல் சீட்டினை வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகிறார்கள். இதுநாள் வரை 229-கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2,29,507 வாக்காளர் தகவல் சீட்டும் 230-நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2,03,789 வாக்காளர் தகவல் சீட்டும் 231-குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 2,17,106 வாக்காளர் தகவல் சீட்டும் 232- பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,93,344 வாக்காளர் தகவல் சீட்டும் 233-விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,75,151 வாக்காளர் தகவல் சீட்டும் 234- கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 1,73,783 வாக்காளர் தகவல் சீட்டும் என மொத்தம் 11,92,680 வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியானது இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வாக்காள பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் உங்களை நாடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முழுஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் வரும் 23.04.2026 அன்று அனைவரும் தங்கள் வாக்குசாவடிக்கு தவறாமல் சென்று தங்கள் ஜனநாயக கடமையின் நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b