Enter your Email Address to subscribe to our newsletters

அலகாபாத் , 18 ஏப்ரல் (ஹி.ச.)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மீது இரட்டை குடியுரிமை குற்றச்சாட்டு தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்துமாறு அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர் எஸ்.
விக்னேஷ் சிஷிர் என்பவர், ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, அவர்மீது எப்.ஐ.ஆர்.
பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த எம்.பி./எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், கடந்த ஜனவரி 28-ந்தேதி மனுவை தள்ளுபடி செய்தது.
குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் தீர்ப்பளிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என அந்த நீதிமன்றம் தெரிவித்தது.
இதனை எதிர்த்து மனுதாரர் அலகாபாத் கோர்ட் -இல் மேல்முறையீடு செய்தார்.
விசாரணையின் போது, ராகுல் காந்தி தனது குடியுரிமையை “பிரிட்டிஷ்” என ஒப்புக்கொண்டதாக கூறப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட்டு, குற்றச்சாட்டுகளை மேலோட்டமாக ஆய்வு செய்தபோது, விசாரணைக்கு உட்படுத்தத்தக்க அம்சங்கள் இருப்பதாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பின், இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்ற மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA