Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)
தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்,
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாடு தனது அரசியல் வலிமையை அதிகரிக்கும் வாய்ப்பையும், கூடுதலாக 20 நாடாளுமன்ற இடங்களைப் பெறும் உரிமையையும் இழந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய 50% அதிக இடங்களைப் பெறும் பொற்கால வாய்ப்பை நாம் இழந்ததோடு மட்டுமல்லாமல், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், மு.க. ஸ்டாலின் கண்மூடித்தனமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு (Delimitation) செய்யப்பட்டிருந்தால், தமிழ்நாடு 9 நாடாளுமன்ற இடங்களை இழந்திருக்கும். ஆனால், இந்த மசோதாவிற்கு நீங்கள் காட்டிய எதிர்ப்பினால், இப்போது 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுசீரமைப்பு நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் மேலும் அதிக இடங்களை இழக்கும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 1998 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில், ஜெயலலிதா பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்தார். அப்போது, உங்கள் கூட்டணி கட்சிகளே அந்த மசோதா நிறைவேறாமல் தடுத்ததாகவும், இப்போது அதே மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் நோக்கத்தையே நீங்கள் பாதித்துள்ளீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், நாடு முழுவதும் உள்ள பெண்களின் அதிகாரமளிப்பிற்கும் பெரிய அநீதியை செய்துள்ளீர்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“மு.க. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதை கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்த சேதத்தையா? அல்லது பெண்களின் முன்னேற்றத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை வீணடித்ததையா?” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN