Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 18 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி,
இன்று (18.04.2026) வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ. 1,29,14,818/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5,68,950/- மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே வேளையில், பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ. 84,93,918/- ரொக்கத் தொகை மற்றும் ரூ. 8,94,200/- மதிப்பிலான பொருட்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெருந்தொகையை எடுத்துச் செல்லும்போது அதற்குரிய முறையான ஆவணங்களைக் கையோடு வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b