Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 18 ஏப்ரல் (ஹி.ச)
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐந்துரதம்,கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் அர்ஜுனன் தபசு ஆகியகுடவரை சிற்பங்கள் அமைந்துள்ளன.
இவற்றை கண்டு ரசிப்பதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. சுற்றுலாவை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது.
பல்லவர் காலத்தில் பிரபலமாக இருந்த பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும் பழமையான கோயிலை உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது, மேலும் இந்த பாறைக் கோயில்கள் தென்னிந்தியாவின் புனிதமான இடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார அலுவலகம், இவற்றை பழமை மாறாமல் பராமரித்து, பாதுகாத்து வருகிறது.சுற்றுலா பயணியரிடம், நுழைவுக்கட்டணமாக, இந்தியருக்கு, தலா 40 ரூபாய், சர்வதேச நாட்டினருக்கு, தலா 600 ரூபாய் என, அத்துறை வசூலிக்கிறது.
இன்று (ஏப்ரல் 18) உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b