Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஏப்ரல் (ஹி.ச.)
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேகர்பாபு, தொகுதிக்குட்பட்ட தங்கசாலை பேருந்துநிலையம் அருகிலுள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காவலர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் உற்சாகமாக வரவேற்று ஆதரவு தெரிவித்ததாக கூறினார். அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீண்டும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற விருப்பம் அவர்களின் வரவேற்பிலும் செயல்பாடுகளிலும் வெளிப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், மூன்றாவது முறையாக வேட்பாளராக நிற்கும் நிலையில், தாம் இதுவரை செய்த பணிகள் மற்றும் மக்களுடன் கொண்ட நெருக்கம் காரணமாக ஆதரவு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கட்சி சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்பதற்காக மக்கள் “உதயசூரியன்” சின்னத்திற்கே வாக்களிப்போம் என்று உறுதி அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
சாலை ஓரம் மற்றும் நடைபாதை ஓரம் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வழங்குவது தனது முக்கிய நோக்கம் எனவும் சேகர்பாபு கூறினார்.
மேலும், தனது தொகுதியில் மூன்று பள்ளிகளை புதிதாக கட்டியதுடன், இரண்டு இடங்களில் படிப்பகங்கள் அமைத்ததையும், மூன்று கணினி பயிற்சி மையங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, சீரான குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அடுத்த கட்டமாக செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டங்கள் தொடர மக்கள் ஆதரவு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ