Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி ,18 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:—
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (17.4.2026) வரை நடத்தப்பட்ட சோதனைகளில், பறக்கும் படையினரால் மொத்தமாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 518 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சத்து 12 ஆயிரத்து 162 ஆகும்.
அதேபோல், சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 282 என கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து கட்டுப்படுத்தவும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA