Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 19 ஏப்ரல் (ஹி.ச.)
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார்.
சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்த அவர் பவுண்டரி, சிக்சர்கள் அடித்து ரன்களை குவித்தார்.
மற்றொரு முனையில் டிராவிஸ் ஹெட் 23 ரன்கள் எடுத்தார்.
இஷான் கிஷான் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஹென்ரிக் கிளாசன் அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
சென்னை அணியின் சார்பில் ஓவர்டன் மற்றும் காம்போஜ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்கத்தில் சீராக விளையாடினாலும் இடைக்கிடையே விக்கெட்டுகளை இழந்து பின்னடைவை சந்தித்தது.
மேட் ஷார்ட் 34 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள், சர்பராஸ் கான் 25 ரன்கள், சிவம் துபே 21 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் 7 ரன்களில் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்கு மிக அருகில் சென்றும் சென்னை அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA