Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர் , 19 ஏப்ரல் (ஹி.ச.)
சத்தீஷ்கார் மாநிலம் சக்தி மாவட்டம் சிங்கிதாரி கிராமத்தில் உள்ள வேதாந்தா குழுமம் அனல் மின் நிலையத்தில்,
தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.
வெடி விபத்து ஏற்பட்டதும், அங்கு இருந்த தொழிலாளர்கள் உயிர் தப்பிக்க அலறியடித்து வெளியே ஓடினர்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்தில் 35 முதல் 40 பேர் வரை கடுமையாக காயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 10-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், அவசரகால மீட்பு குழுக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், விபத்திற்கான காரணம் தொடர்பாக நடந்த முதல்கட்ட விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பாய்லரில் அதிக அளவு எரிபொருள் சேமித்து வைத்ததால் அழுத்தம் அதிகரித்து, அதனால் வெடிவிபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தகவலை தடய அறிவியல் ஆய்வகமும் உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த ஓராண்டாகவே அந்த ஆலையில் பல முறை தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA