Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை,19 ஏப்ரல் (ஹி.ச.)
திராவிட முன்னேற்றக் கழகம் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில், பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், சென்னை மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஏ.எம். சின்னப்பா, அருட்தந்தை ஆல்டோ, தென்னிந்திய திருச்சபை (CSI) ஆயர் பவுல் பிரான்சிஸ் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சி. பெர்னந்தாஸ் ரத்தின ராஜா, இந்திய தேசிய தேவாலயங்கள் பேரவை (NCCI) பொதுச் செயலாளர் ஆசிர் எபெனேசர், தமிழ்நாடு லத்தீன் ஆயர் மாநாட்டின் பிரதிநிதி பிரான்சிஸ் ஸ்டீபன், மெதடிஸ்ட் சர்ச் ஆஃப் இந்தியா மெட்ராஸ் மண்டல பிஷப் சி.ஜி. தயானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கும், சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கும் முதலமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக செயல்பட்டு வருவதையும் பாராட்டினர்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் மற்றும் வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ