Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரகாண்ட், 19 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் புனித சார் தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகள் இன்று (ஏப்ரல் 19-ம் தேதி) தொடங்கின.
இதன் ஒரு பகுதியாக, யமுனை தேவியின் புனித பல்லக்கு இன்று காலை கர்சாலியில் இருந்து யமுனோத்ரி தாமுக்கு புறப்பட்டது. இதேபோல், கங்கை தேவியின் புனித பல்லக்கும் பைரவ்காட்டியில் உள்ள பழமையான பைரவர் கோயிலில் இருந்து கங்கோத்ரி தாமை நோக்கி புறப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் சார் தாம் யாத்திரையில் கேதார்நாத் தாம், கங்கோத்ரி தாம், யமுனோத்ரி தாம் மற்றும் பத்ரிநாத் தாம் ஆகிய நான்கு புனித தலங்களும் அடங்கும்.
பக்தி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கும் கேதார்நாத் தாமின் கதவுகள், வேத மந்திரங்கள், பாரம்பரிய சடங்குகள் மற்றும் சனாதன மரபுகளுடன் ஏப்ரல் 22-ம் தேதி காலை 8:00 மணிக்கு பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளன.
யாத்திரையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேதார்நாத் இறைவனின் உற்சவ விக்ரகம், தனது குளிர்கால இருப்பிடமான உகிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலில் இருந்து பாரம்பரிய சடங்குகளுடன் புறப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.
கேதார்நாத் இறைவனின் உற்சவ டோலி இன்று உகிமத்தில் இருந்து பாட்டாவை சென்றடையும்.
ஏப்ரல் 20-ம் தேதி பாட்டாவில் இருந்து புறப்பட்டு கௌரிகுண்டை அடைந்து, அன்று இரவு புனித கௌரிமாய் கோயிலில் தங்கும்.
ஏப்ரல் 21-ம் தேதி காலை கௌரிகுண்டில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் தாமில் உள்ள கோயில் கருவூலத்தை அடையும். அதன்பின் மத சடங்குகள் முறைப்படி தொடங்கும்.
இதையடுத்து ஏப்ரல் 22-ம் தேதி காலை 8:00 மணிக்கு பக்தர்களுக்காக கோயில் கதவுகள் திறக்கப்படும்.
Hindusthan Samachar / vidya.b