Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 19 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது.
இது குறித்து விரிவான தகவல்களை அறிய இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காகச் சாய்தளம் (Ramp), குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் சக்கர நாற்காலிகள் (Wheelchair) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் 'சக்சம்' (SAKSHAM) கைபேசி செயலி மூலம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கீழ்க்கண்ட சேவைகளைப் பெறலாம்:
புதிய வாக்காளர் பதிவு மற்றும் முகவரி மாற்றம் செய்தல்.
வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி தேவைப்படுவோர் முன்பதிவு செய்தல்.
வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வர வாகன வசதி (Pick up and Drop) கோருதல்.
பார்வையற்றோருக்கான குரல் வழி உதவி மற்றும் செவித்திறன் குறைந்தோருக்கான வசதிகளைப் பெறுதல்.
தேவையான உதவி கோருவோர், தங்களது கைபேசியில் 'சக்சம்' செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b