Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 02 ஏப்ரல் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கேரளாவில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி கூட்டணிக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, இன்று புத்தந்தோப்பு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
நமது பிரதமர் ஒரு கோழை, அவருக்கு முதுகெலும்பு இல்லை. மேலும் தேசத்தின் எரிசக்தி பாதுகாப்பில் அவர் சமரசம் செய்து கொண்டார். எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் இருப்பதால், அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார்.
இந்தியாவுக்காக குரல் கொடுக்க அவருக்குத் தைரியம் இல்லாததால், நாம் ஒவ்வொரு நாளும் அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
போரின்போது வளைகுடா பகுதியில் சிக்கித் தவித்த இந்தியர்களுக்கு மோடியின் கொள்கைகள் பாதுகாப்பை வழங்கவில்லை. இடதுசாரி முன்னணி பா.ஜ.க.வின் பி-டீமாக செயல்படுகிறது. அந்த கூட்டணியில் உள்ள எந்த தலைவராவது மோடியை எதிர்த்து பேசியிருக்கிறார்களா? அவர்கள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அல்லது வருமான வரித்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதா?
மாநில மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து இடதுசாரி அரசு அலட்சியமாக இருந்தது.
அரசு மருத்துவமனைகளில் பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளது. கேரளாவின் சுகாதார அமைப்பு சீர்குலைந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b