Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 02 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி என இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். இதில் வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.
சென்னையிலிருந்து திருச்சி வந்தடைந்த விஜய், பிரசார வாகனத்தில் பாலக்கரை நோக்கிச் சென்று கொண்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு வரவேற்பு அளித்து வரும் நிலையில், பிரசார வாகனத்தின் மேலே நின்றபடி பயணித்து வருகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து
முருகேசபாண்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பகல் 12.30 மணிக்கு மேல் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தொடர்ந்து விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவருக்கு காவல்துறை சார்பில் 51 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக அங்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் மனு அளித்தனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.
Hindusthan Samachar / vidya.b