Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 20 ஏப்ரல் (ஹி.ச)
தமிழகத்தில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக பல ஆண்டாக தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். இதனால் 2 மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல் நடைபெறும் நாட்களுக்கு முன்னும், பின்னும் மதுக்கடைகள் அடைக்கப்படும்.
இந்த முறை புதுவை சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனால் புதுவையிலிருந்து தமிழகத்துக்கு மது கடத்தப்படலாம் என்பதால் நாளை (ஏப்ரல் 21) முதல் 23ந் தேதி வரை 3 நாட்கள் புதுவை, காரைக்காலில் மதுக்கடைகள் மூடப்படுவதாக புதுவை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் புதுவை, காரைக்காலில் எல்லையோர மதுக்கடைகளில் புதுவை போலீசார், கலால் துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். எல்லை பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் வாங்கி செல்கிறார்களா? என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சீனியர் எஸ்பி கலைவாணன், கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோர் உத்தரவின்பேரில் கலால் துறையினரும், போலீசாரும் இந்த கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / vidya.b