Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச)
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் என் மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன என துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பொதுக்கூட்டத்தில் பெண்ணை மேடையில் நான் அவமதித்ததாகக் கூறுவதும், நான் தவறாக நடந்து கொண்டது போலவும், பெண்களை மதிக்காதவன் போலவும் சித்தரிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அவர் என் சொந்தக் குழந்தை. ஒரு குழந்தையிடம் தந்தை காட்டும் பாசத்தைக் கூட கொச்சைப்படுத்திப் பேசுவதுதான் இந்த சமூக விரோதிகளின் இலட்சணம்.
இங்கு அறம் பேசுபவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. எப்போதும் சமூக வலைதளத்தில் தீய சக்திக்கு எதிராக பேசுபவர்களை ஆபாசமாக பேசுகிறார்கள். குறிப்பாக பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். இதற்கு பல சாட்சிகள் உண்டு.
மேலும், துறைமுகம் தொகுதியை சேர்ந்த திமுக பிரபலம் , தன் சொந்த மகள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும், மருமகனை அடியாட்களை வைத்து கடத்தி சென்று அடைத்து வைத்ததும் நாடறிந்த உண்மை. இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலா என்னை நோக்கி விரல் நீட்டுகிறது? தன் சொந்த மகளின் விருப்பத்தையே மதிக்காமல், வன்முறையில் ஈடுபடும் இவர்களா பெண்களின் பாதுகாவலர்கள்?
பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால், உண்மை எப்போதும் உறங்காது. என் மீது வீசப்படும் இந்த அவதூறுகளுக்கு, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
அநீதிக்கும், அவதூறு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
Hindusthan Samachar / P YUVARAJ