Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 ஏப்ரல் (ஹி.ச)
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், தமிழகப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
கடற்கரையோரம் அமைந்துள்ள முருகப்பெருமானின் இரண்டாம் படை வீட்டில், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று ஆசி பெற்றார்.
இன்று காலை கோயிலுக்கு வருகை தந்த அமைச்சருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தரிசனத்தை முடித்த பின்னர் கோயில் பிரசாதங்களைப் பெற்றுக்கொண்ட அவர், கோயிலின் பிரம்மாண்டமான ஒன்பது நிலை ராஜகோபுரம் மற்றும் கட்டிடக்கலைச் சிறப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அவருடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக,அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று ஏப்ரல் 19-ம் தேதி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அனந்தன் அய்யாசாமியை ஆதரித்து பிரச்சார பேரணியில் கலந்துகொண்டார்.
தென் மாவட்டங்களில் தேர்தல் பணிகளை முடித்துக்கொண்டு, ஆன்மிகத் தலமான திருச்செந்தூருக்கு வருகை தந்து வழிபாடு நடத்தியுள்ளார்.
மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / vidya.b