Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச)
சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான சைதாப்பேட்டையில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மா. சுப்பிரமணியன் மீண்டும் களமிறங்குகிறார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அவர் ஆற்றிய பணிகளை முன்னிறுத்தி திமுக பிரச்சாரம் செய்து வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க. ஸ்டாலின், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு ஆதரவாக இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சைதாப்பேட்டை தொகுதியின் முக்கிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள், வியாபாரிகள், பெண்கள் ஆகியோரை நேரில் சந்தித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கிய அவர், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். வேட்பாளர் மா. சுப்பிரமணியனும் உடன் சென்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரத்தின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின்,
கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியின் சாதனைகளான மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு வழிவகுத்துள்ளது.
இந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால், மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட பேசலாம்.
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, மாநில உரிமைகளுக்காகப் போராடினேன் என்று பெருமையுடன் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b