Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி ச.)
சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே தீவிரமாகப் பேசினார்.
கூட்டத்தில் தொடக்கத்தில் பெரும் திரளான மக்கள் இருந்தாலும், அவரது உரை முடிவடையும் முன்பே சிலர் வெளியேறியதும் கவனிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய கார்கே,
ஜனநாயகவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் இடையிலான தேர்தல்தான் இது” என்று கூறி, இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும், காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானா மக்களை எளிதில் அணுகக்கூடியவர் என்றும், பல நலத்திட்டங்களை மேற்கொண்டவர் என்றும் பாராட்டினார்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தேடி உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வளர்ச்சிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மற்றும் காங்கிரஸ் கூட்டணி முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளதையும், கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால், மத்தியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு குறைந்த வரி பங்கீடு அளிப்பதாகவும், கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை அரசியல் காரணங்களால் நிறுத்துவதாகவும் கார்கே விமர்சித்தார்.
இயற்கை பேரிடர் காலங்களிலும் தேவையான உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
தமிழ்நாடு ஆளுநர் மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் மூலம் தமிழ்நாட்டின் குரலை குறைக்க முயற்சி நடந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
அத்துடன், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார் என்றும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளோம் என்றும் கூறினார்.
இறுதியாக, தமிழ்நாட்டின் நலனையும், மதச்சார்பற்ற கொள்கைகளையும் காக்க காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கார்கே வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ