முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போலீஸ் பாதுகாப்பு
கரூர், 21 ஏப்ரல் (ஹி.ச.) கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, புதிய பேருந்து நிலையத்தில இருந்து உழவர் சந்தையில் இருந்து திருமாந
Police protection for former Minister M.R. Vijayabhaskar.


கரூர், 21 ஏப்ரல் (ஹி.ச.)

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

புதிய பேருந்து நிலையத்தில இருந்து உழவர் சந்தையில் இருந்து திருமாநிலையூர் வரை போக்குவரத்து நெரிசல ஏற்படுவதால் உழவர் சந்தை மேற்புற வளைவு முதல் செல்லாண்டிபாளையத்தை இணைக்கும் வகையில் அமராவதி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கப்படும். கரூரில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் கானகத்திற்குள் கரூர் திட்டத்தில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

கோயில் இனாம் நில தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணனுக்கு நான் நிதி உதவி செய்து தூண்டி விடுவதுபோல தகவல்களை பரப்பி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-16-ம் ஆண்டில் பொறுப்பில் இருந்தபோதே, 2015 ஆண்டே ராதாகிருஷ்ணன் பங்கேற்ற கூட்டங்கள் நடந்துள்ளன.

2018-ம் ஆண்டு அவர் தொடர்ந்த வழக்கில் 2019-ம் ஆண்டு தீர்ப்பு வந்தது.

அப்போது இனாம்நில குடியிருப்பவர்கள் அரசுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய கரூர் எம்எல்ஏ இலவசமாக பட்டா தருகிறேன் எனக் கூறியதை நம்பி மக்கள் வாக்களித்து ஏமாந்தனர்.

தற்போது நாங்கள் தவறு செய்ததால் தான் பிரச்சினை என்கிறார். நாங்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் தவறு செய்திருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதானே. 5 ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்.

கோயில் இனாம் நிலம் தொடர்பாக தாந்தோணிமலையில் நேற்று முன்தினம் துண்டு பிரசுரம் வழங்கியப்போது அங்கு சென்ற என்னை தாக்க முயற்சி நடைபெற்றது.(அப்போது சில புகைப்படங்களை காட்டி) கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலின்போதே என்னை இருவர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். என்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

அப்போதிருந்த எஸ்பி, டிஎஸ்பி ஆகியோருக்கு இத்தகவல் தெரியும். தேர்தலில் நான் வெற்றி பெற்றால் என்னை கொலை செய்ய திட்டமிருட்டிருந்தனர். தேர்தலில் தோல்வியடைந்ததால் உயிர் தப்பினேன். அவர்கள் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, முதல்வர் ஆகியோருடன் புகைப்படங்களில் உள்ளனர்.

அதன்பிறகு மாவட்ட ஊராட்சி துணை தலைவர் இடைத்தேர்தலின்போது என்னை தாக்க முயற்சி நடைபெற்றது. வேடசந்தூர் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காரில் வந்தப்போது சிலர் தடுத்து தாக்கி மாவட்ட அவைத்தலைவரை கடத்தி சென்றனர். என் மீது ஆசிட் அடிக்க முயன்றனர்.

மானாமதுரை, மதுரை பகுதியில் இருந்து ரவுடிகள், குண்டர்கள் எம்.சி.சங்கர் வரவழைத்து என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்.

தற்போது தேர்தலை நிறுத்த முயற்சி நடக்கிறது. என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் ரைபிள் கிளப் உறுப்பினர். துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கேட்டப்போது என் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக் கூறி அனுமதி மறுத்துவிட்டனர். இன்று கன்மேன் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த டிசம்பர் மாதமே மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு புகார் அளித்திருந்தேன். என் உயிருக்கோ, என் குடும்பத்தினரின் உயிருக்கோ எதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர்தான் காரணம்.

நியாயமான முறையில் தேர்தலை நடத்தவேண்டும். வெற்றி வாய்ப்பு எனக்கு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், விஜயபாஸ்கருக்கு கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீஸார் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b