Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இறுதி கட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கலந்து கொண்டு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியதாவது:
ஓட்டுக்கு காசு வாங்கிவிட்டால் மீண்டும் அரசியல்வாதிகளை கொள்ளை அடிக்கத்தான் தூண்டும். காரைக்குடியில் ஒரு ஓரத்தில் நின்று உங்கள் மகன் பேசுகிறேன் என்று நினைக்க கூடாது. ஓட்டுமொத்த தமிழ் குடிக்காக தான் உங்கள் மகன் இதை பேசுகிறேன். நீங்கள் படித்த பிள்ளைகள்.
நீங்கள் நினைத்தால் மகத்தான மாற்றத்தை இங்கே கொண்டு வர முடியும். ஒரு தம்பி ஒரு கவிதை போல எழுதி இருந்தான். இங்கே படித்தவனுக்கு மதிப்பில்லை. நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு இருக்கிறது. காரணம், படித்தவனும் நடித்தவனை நாட்டிற்கு ஆள கூப்பிடுவதால், இங்கே படித்தவனுக்கு மதிப்பில்லை. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலை போராட்டத்தில் பங்கு எடுக்காதவனை, 25 ஆண்டுகள் ஆள வைத்தீர்கள். அன்பு பெற்றோர்கள் நான் எனக்கு ஓட்டு கேட்கவில்லை. உங்களுக்கு தான் கேட்கிறேன். என் வெற்றி என் வெற்றி அல்ல. நீங்கள் கை சின்னத்திற்கு போட்டீர்கள், அவர் வென்றார். நீங்கள் தோற்றீர்கள். கார்த்தி சிதம்பரத்துக்கு போட்டீர்கள். அவர் வென்று எம்பி ஆனார். நீங்கள் தோற்றீர்கள். ப.சிதம்பரத்துக்கு போட்டீர்கள், அவர் பலமுறை வென்றார்.
நீங்கள் தோற்றீர்கள், ஒன்றும் கிடையாது. 3 முறை மத்தியில் அமைச்சராக இருந்தவர்கள் ஊர் என்று இதை எவனிடமாவது காட்டி விடு, எவனையாவது சொல்ல சொல்லும் பார்க்கும். காரைக்குடி ஊர் எங்கு இருக்கிறது என்று எவனுக்காவது தெரியுமா? ஒரு பதவியிலும் இல்லாத உன் மகன், சாதாரண மகன், காரைக்குடியில் போட்டி என்று சொன்ன உடன், உலகத்தில் காரைக்குடி தெரியாத ஒருத்தன் இருக்கிறாரானா என்று கேளு.
இந்த மகனை வெல்ல வைக்க ஜப்பானில் இருந்து, துபாயில் இருந்து, சிங்கப்பூர். அமெரிக்கா, ஹாங்காங், அரபு நாட்டில் இருந்து, இலங்கையில் இருந்து, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.
என் வெற்றி, அவன் வெற்றி. என் வெற்றி. உன் வெற்றி. என் வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றி, அதனால் அவன் நினைக்கிறான். அதனால் மாற்றத்தை எங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த மண்ணில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
வாக்கு என்பது நம்மை காக்க வேண்டும். நம் மொழி, நம் இனத்தை காக்க வேண்டும். இனத்தின் மானத்தை காக்க வேண்டும். மண்ணை காக்க வேண்டும்.
மண் வளத்தை காக்க வேண்டும். மக்கள் நலனை காக்க வேண்டும். வாக்கு என்பது ஜனநாயகத்தின் வலிமை மிக்க ஆயுதம். அதனை என் அன்பு சொந்தங்கள் அநீதிக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். அதுதான் மாற்றம். ஜனநாயகம் பணநாயகம் ஆனதால் நாடே சீரழிந்து போனது.
இவ்வாறு சீமான் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b