தென் பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க 6 மாத அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
டெல்லி, 21 ஏப்ரல் (ஹி.ச.) தென் பெண்ணையாறு நீர்பங்கீடு தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைப்பதற்கு கூடுதலாக 6 மாத கால அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உச்சநீதி
தென்பெண்ணை


டெல்லி, 21 ஏப்ரல் (ஹி.ச.)

தென் பெண்ணையாறு நீர்பங்கீடு தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைப்பதற்கு கூடுதலாக 6 மாத கால அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான நிர்வாக நடைமுறைகள் இன்னும் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனுவில், ஜல் சக்தி அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளதுடன், பல்வேறு அமைச்சகங்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அமைச்சரவை வரைவுக் குறிப்பு தயாரிக்கப்பட்டு, ஜல் சக்தி அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவுக் குறிப்பு தற்போது மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்காக அமைச்சரவைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பின்னர், தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்து பரிந்துரைகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தீர்ப்பாயம் அமைப்பதற்கான அறிவிக்கை தயாரித்து சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, இறுதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த அனைத்து நடைமுறைகளையும் நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படுவதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் திட்டமிட்டதல்ல, சூழ்நிலைகளால் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

எனவே, தென் பெண்ணையாறு நீர்பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்ற மேலும் 6 மாத கால அவகாசம் வழங்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P