Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி 22 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக மூலம் அம்மாவட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் புகார் மனு அனுப்பபட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சக்தி ஆர்.முருகன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு தேர்தல் செய்தி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட அட்டை வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நாளை 23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே பத்திரிக்கையாளர்களிடம் புகைப்படம் மற்றும் கடிதம் ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெற்றுக் கொண்டார்.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை வரவழைத்து அதில் குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் தேர்தல் பணிக்குழு மூலம் வழங்கப்படும் இந்த அடையாள அட்டை மூலம் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை போன்ற செய்திகளை சேகரிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் கடந்த தேர்தலின் போது கூட பத்திரிக்கையாளர் மற்றும் புகைப்படகாரருக்கு அடையாள அட்டை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் பத்திரிக்கையாளர்களை தேர்தல் செய்தி சேகரிக்க விடாமல் தடுக்கும் வகையில் பாரபட்சமாக செயல்பட்டு வருவது வேதனைக்குரியதாகும்.
எனவே மாவட்ட தேர்தல் அலவலரும் மாவட்ட ஆட்சியருமான தாங்கள் இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் முறையான அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b