Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை அவர்களது இயல்பான பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு சார்பில், உயர் நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில் கூறியிருப்பதாவது,
அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை அவர்களுக்கான பணிகளைச் செய்யாமல், அலுவலக வேலை உள்ளிட்ட வேறு பணிகளில் ஈடுபடுத்தி சம்பளம் வழங்குவது சட்டவிரோதம்.
மேலும், 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைகள் மற்றும் 1995, 2005 ஒப்பந்தங்களின்படி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பிற பணிகளில் ஈடுபடுத்தப்படக்கூடாது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் “வேறு பணிகளில்” இருப்பதால், பணிச்சுமை அதிகரித்து, மீதமுள்ள பணியாளர்கள் அதிக நேரம் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை அவர்களது இயல்பான பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதி ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b