Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 22 ஏப்ரல் (ஹி.ச.)
பல ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த கஞ்சா கடத்தல் கும்பல் தலைவன் ஒருவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் லாரி ஒன்றை சோதனை செய்த போது, சுமார் 661.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மதுரை மண்டல அலுவலகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
விசாரணையில், ராமதாஸ் என்கிற கருப்பபாண்டி இந்த கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நிலையில், ராமதாஸ் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர் சிங்கப்பூரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியா திரும்பும் தகவல் கிடைத்ததையடுத்து, ஏப்ரல் 19ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் காத்திருந்து, அவர் வந்தவுடன் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இதனையடுத்து, அவரிடம் இருந்து மேலும் தகவல்கள் பெற அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ