Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது.
4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
இங்கு நுண்பார்வையாளர்கள், துப்பாக்கிய ஏந்திய போலீஸார் அல்லது துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, பல தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெயில் காரணமாகப் பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி, சீமான், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மற்றும் வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவம், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, நிழற்பந்தல், வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் ஏற்பாடு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b