Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23.04.2026) மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வரும் நிலையில், முதல்முறை வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 216 - திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், தனது முதல் வாக்கினைப் பதிவு செய்த இளம் வாக்காளர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், திருவைகுண்டம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சன்னி கச்வாஹா நேரில் கலந்துகொண்டு, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய இளைஞர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
முதல்முறை வாக்காளர்கள் தேர்தல்களில் ஆர்வத்துடன் பங்கேற்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
வாக்களிப்பது தார்மீகக் கடமை என்பதைத் தாண்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அதிகாரிகளின் இந்தச் செயலால் நெகிழ்ந்த இளம் வாக்காளர்கள், தங்களின் முதல் தேர்தல் அனுபவம் மறக்க முடியாத பசுமை நினைவாக அமைந்ததாகத் தெரிவித்தனர்.
திருவைகுண்டம் தொகுதியில் தற்போது வரை வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி சுமுகமாகவும், அமைதியான முறையிலும் நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்பந்தல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ