Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
காலை 9 மணி நிலவரப்படி மாநிலத்தில் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகின. திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20.38 சதவீதமும், சென்னை மாவட்டத்தில் 16.51 சதவீதமும், ஈரோடு மாவட்டத்தில் 19.55 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
அந்த வகையில் நடிகர் பிரபு தனது மகனும் நடிகருமான விக்ரம் பிரபுவுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.
வாக்குப்பதிவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு கூறுகையில்,
வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை. எனவே, தயவுசெய்து வாக்களிப்பதை தவறவிடாதீர்கள். யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ, அவர்களுக்கு வந்து வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில்,
வாக்களிப்பது நமது பொறுப்பு என்று நினைக்கிறேன். இந்த முறை தேர்தல் குறித்து இவ்வளவு பேச்சுகள் உள்ளன. இளைய தலைமுறையினர் அரசியல் பற்றி பேசத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏனெனில் இது மிகவும் முக்கியமான விஷயம். நாம் எப்படிப்பட்ட நாட்டை விரும்புகிறோம் என்பது குறித்து இளைஞர்களிடம் மேலும் சிந்தனைகள் உருவாகும் என்று நம்புகிறேன்.
இது நகரத்தோடு முடிந்துவிடுவதில்லை.
நாட்டைப் பற்றிய சிந்தனையாகவும் விரிவடைய வேண்டும். நாம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தினால்தான், எது சரி, எது தவறு என்று கேள்வி கேட்க முடியும். இங்கிருந்துதான் அது தொடங்குகிறது என்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல திருவிழா.
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b