Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் திமுக கட்சி அலுவலகத்தில் புகுந்து மண்டல குழுத் தலைவரை குறிவைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நேதாஜி நகரை சேர்ந்த கணேசன் (52), திமுக கட்சியின் 38வது வட்டச் செயலாளராகவும், தற்போது 4வது மண்டல குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில், நேற்று இரவு கணேசன் தனது ஆதரவாளர்களுடன் நேதாஜி நகர் 3வது தெருவில் உள்ள திமுக அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிமுகவை சேர்ந்த விநாயகம், செல்வம், டெல்லிராஜ் உள்ளிட்ட சிலர் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து, கணேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலால் காயமடைந்த கணேசன் மற்றும் அங்கு இருந்தோர் கூச்சலிட்டதால், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
காயமடைந்த கணேசன் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர், சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியதாக கூறப்படும் அதிமுகவினரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தேர்தல் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ