Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரளாகச் செல்வதால், பேருந்து போக்குவரத்தில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதற்கு போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
போக்குவரத்து துறை தெரிவித்ததாவது,
இயல்பான நாட்களில் தினமும் சுமார் 2,092 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால் தேர்தலை முன்னிட்டு பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, சுமார் 10,000 பேருந்துகள் வரை இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், 6.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
எனினும், நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் போக்குவரத்து வேகம் குறைந்ததுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால், பேருந்துகள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனால் சில இடங்களில் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்பட முடியாத சூழல் உருவானதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் அதிகரித்த திரளும், சாலைகளில் ஏற்பட்ட நெரிசலும், பேருந்து சேவையை சீராக நடத்துவதில் சவாலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பொதுமக்கள் சிரமம் குறைய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தேர்தல் காலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்வது வழக்கமானதுதான் என்றாலும், எதிர்காலத்தில் இத்தகைய நெரிசலை சமாளிக்க மேலும் திட்டமிடல் அவசியம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ