Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், உள்தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் கத்தரி வெயில் தொடங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, நேற்று அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனைத் தொடர்ந்து, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் பகுதிகளில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டும், ஈரோடு, சேலம் பகுதிகளில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரம், பாளையங்கோட்டை, தருமபுரி பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோவை, திருச்சி, நாமக்கல் பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட், திருத்தணி, திருப்பத்தூர் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P