Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை ராயப்பேட்டை பகுதியில் தேர்தல் நாளில் ஏற்பட்ட திமுக மற்றும் தவெக நிர்வாகிகள் இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றைய வாக்குப்பதிவின்போது ராயப்பேட்டை வி.எம். தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், 119வது தவெக வட்டச் செயலாளர் ரதி மற்றும் அவரது இரு மகன்களை, திமுக 119வது வட்டச் செயலாளர் மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக ஆதரவாளர்கள் மாலை நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நிலைமை பதற்றமடைந்தது.
பின்னர் இருதரப்பினரும் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
ரதி அளித்த புகாரின் பேரில், மோகன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, காயம் ஏற்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேவேளை, மோகன் அளித்த எதிர்ப்புகாரின் அடிப்படையில் ரதி மற்றும் அவரது மகன்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பினரின் புகார்களையும் பதிவு செய்த ஐஸ் ஹவுஸ் போலீசார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ