Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 24 ஏப்ரல் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதியில் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர், செல்போனில் வீடியோ கேம் விளையாட தருவதாக கூறி திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 5 சிறுமிகளை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(1) (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள POCSO நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு 5 குற்றங்களுக்கு மரண தண்டனை, 4 குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 22 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்
Hindusthan Samachar / ANANDHAN