திருவள்ளூர் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
திருவள்ளூர், 24 ஏப்ரல் (ஹி.ச.) திருவள்ளூர் அருகே மணவாளன் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. மணவாளன் நகர், செங்கல்ராயன் தெரு அருகே “சதீஷ் எண
தீ விபத்து


திருவள்ளூர், 24 ஏப்ரல் (ஹி.ச.)

திருவள்ளூர் அருகே மணவாளன் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

மணவாளன் நகர், செங்கல்ராயன் தெரு அருகே “சதீஷ் எண்டர்பிரைசஸ்” என்ற பெயரில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் குடோன் இயங்கி வந்தது.

இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் கடை அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அருகில் எரிந்து கொண்டிருந்த தீ திடீரென குடோன் உள்ளே பரவி, சில நிமிடங்களில் கடை முழுவதும் தீ மளமளவென பரவியது.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடை உரிமையாளருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய இரும்பு பொருட்கள் கருகி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயில் இருந்து எழுந்த கரும் புகையால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து மணவாளன் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ வைத்ததாக கூறப்படும் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam