Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 24 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் கணிசமாக கடந்த ஆண்டுகளை விட அதிக வாக்குப்பதிவு நிகழ்ந்திருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 8 ஓட்டுகளே பதிவாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் நாட்டையே பரபரப்புள்ளாக்கிய நிலையில் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பில் உள்ளவர்கள் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கை வயல் மக்கள் அறிவித்தனர்.
அதன்படி நேற்று நடந்த வாக்குப்பதிவில் 69 வாக்காளர்களில் 8 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இது குறித்து கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், 'இதுவரை காணாத 85 சதவிகித வாக்குப்பதிவு எனச் சிலிர்ப்போரே, ஒரு நிமிடம்… இவ்வளவு வாக்குகளைச் செலுத்தி தங்களின் ஜனநாயகக் கடமையை தமிழக மக்கள் செவ்வனே ஆற்றியிருக்கும் நிலையில், வேங்கை வயல் தலித் மக்கள் மொத்தமாக இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்த போது,
ஒருபோதும் வாக்கைத் தவிர்க்காதீர்கள்.. உங்கள் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையிலாவது, யாருக்கேனும் வாக்களியுங்கள்” என வலியுறுத்தினேன்.
அந்தப் பகுதி இளைஞர்கள் சிலரிடம் போனில் பேசினேன். “நாங்கதான் ஆதங்கத்துல ஓட்டுப் போட மாட்டோம்னு சொல்றோம். அதுக்காக அப்படியே விட்ருவாங்களா சார்? ஏதாச்சும் ஒரு கட்சிக்காரங்க எங்களை சந்திச்சு பேசி ஓட்டுக் கேட்க மாட்டாங்களா? இந்த நிமிஷம் வரைக்கும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சின்னு யாரும் எங்களை சந்திச்சு ஓட்டுக் கேட்கலை. எங்க 40 குடும்பங்களோட ஓட்டு அவங்களுக்குப் பெரிசா படலை. போட்டா போடுங்க போடலைன்னா போங்கன்னு அவங்க யாரும் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கலை. சுயேட்சை வேட்பாளர்கள்கூட எங்க பகுதிக்கு ஓட்டுக் கேட்டு வரலை. எங்க எதிர்ப்புக்கும் போராட்டத்துக்கும் இவ்வளவுதான் சார் மரியாதை…” என்றார்கள். வெறுத்துப்போய். அறிவித்தபடியே தேர்தலைப் புறக்கணித்துப் போராடி இருக்கிறார்கள்.
விரலில் மை சுமந்த புகைப்படங்களை நாம் பெருமையாகப் பதிவிட்டுக் கொண்டிருக்கையில், ஒரு கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் புறந்தள்ளப்பட்டவர்களாக ஒதுங்கி நிற்பது நெஞ்சை அறுக்கிறது. அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தபோதே மாவட்ட ஆட்சியர் அந்த மக்களைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும்.
வேட்பாளர்களும் கட்சிக்காரர்களும் தேடிப்போய் அந்த மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட மக்களின் ஆதங்கத்தையும் போராட்டத்தையும் யாருமே கண்டுகொள்ளாமல் கடப்பது எந்த வகையில் நியாயம்?
குடிநீரில் மலம் கலக்கப்பட்ட கொடுமையையும், அந்தக் குற்றத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களே பலிகடா ஆக்கப்பட்ட அநீதியையும் எதிர்க்கிற விதமாகத்தான் அந்த மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
85 சதவிகித வாக்குப் பதிவு என்பது வரலாற்று சாதனைதான். பூரிக்கத்தக்க புரட்சிதான்.
ஆனாலும் மை சுமக்காத அந்த மக்களின் விரல்கள், இந்தத் தேசத்தின் முகத்தில் விழுந்த கீறல்கள் இல்லையா?' என வேங்கைவயல் மக்களின் குரலாக ஒலித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN