Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 25 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பாலசமுத்திரம் சாலையில் உள்ள வரட்டாற்று பாலத்தின் அருகே இன்று அதிகாலை வயல் காட்டிற்குச் சென்ற பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் நபர் ஒருவர் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அருகில் சென்று பார்த்தபோது, அவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
அந்த நபர் அங்கிருந்தவர்களிடம் தாகத்தால் குடிக்கத் தண்ணீர் கேட்டுத் துடித்துள்ளார். இதைக் கண்டு பதறிய பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்து விட்டு அவருக்கு உதவ முயன்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த போயன் என்பவரது மகன் முருகன் (44) என்பது தெரியவந்தது.
மர்ம நபர்கள் அவரைத் தலை மற்றும் உடல் பகுதிகளில் கட்டையால் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் எதற்காகப் பழனிக்கு வந்தார்? அவர் என்ன தொழில் செய்து வருகிறார்? முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN