Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 25 ஏப்ரல் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பழந்தின்னிப்பட்டி பகுதியில் துப்பாக்கி விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, திடீரென வெடித்ததில் தாயார் கடுமையாக காயமடைந்தார்.
அப்பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் (59) அவர்களின் மனைவி செல்வி (50). இவர்களுக்கு 17 வயது மகன் ஒருவர் உள்ளார். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய அந்த சிறுவன், தந்தையுடன் விவசாய வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், சிறுவன் வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தவறுதலாக ட்ரிக்கரில் விரல் பட்டதால் துப்பாக்கி வெடித்தது. அதில் இருந்து பாய்ந்த குண்டு அருகில் இருந்த தாய் செல்வியின் கழுத்தில் பட்டு, அவர் தீவிரமாக காயமடைந்தார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த சிறுவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam