Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச)
சென்னையில், ‘ஆதாரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதித்து உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர்கள் அஜித் விக்னேஷ், ராதாரவி, Y. G. மகேந்திரன் மற்றும் பூஜா சங்கர் நடித்துள்ள ‘ஆதாரம்’ திரைப்படத்தை கவிதா பாலு இயக்கியுள்ளார். இந்த படம் எஸ்.எஸ் மீடியா மற்றும் வி.ஏ.கே நிறுவனம் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்பட தயாரிப்பிற்காக பெறப்பட்ட கடன் தொகை ரூ.17.20 லட்சம் வட்டியுடன் நிலுவையில் இருப்பதாகவும், அந்த தொகையை திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜாவித் பாஷா சார்பில் அவரது சட்ட பிரதிநிதி கதிரேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், தயாரிப்பு நிறுவனம் படத்தை வேறு பெயரில் அல்லது ஓ.டி.டி தளங்களில் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த 19வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், வரும் மே 1ஆம் தேதி வரை ‘ஆதாரம்’ திரைப்படத்தை திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ