Enter your Email Address to subscribe to our newsletters

கொடைக்கானல், 26 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார்.
நேற்று மாலை பாம்பார்புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அவர் வந்தடைந்தார்.
கோடை வெப்பத்திலிருந்து ஓரளவு விடுபட்டு, இயற்கை எழில் சூழ்ந்த மலைநகரில் சில நாட்கள் ஓய்வெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான கொடைக்கானல் ஏரி சாலையில் முதலமைச்சர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
வழக்கமான எளிமையுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட அவர், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுடன் அன்போடு உரையாடினார்.
அவரை நேரில் கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து, கை குலுக்கியும், செல்ஃபி எடுத்தும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், பொதுமக்களிடம் தற்போதைய அரசியல் சூழல், குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் மற்றும் வெற்றிவாய்ப்புகள் குறித்தும் முதலமைச்சர் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
மக்களின் மனநிலையை நேரடியாக அறியும் வகையில் அவர் நடத்திய இந்த உரையாடல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
காலை நேரத்தில் ஏரி சாலையில் முதலமைச்சரை நேரில் காண வேண்டும் என்ற ஆவலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் அந்தப் பகுதியில் திரண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், பொதுமக்களுடன் முதலமைச்சர் நெருக்கமாக பழகிய விதம் அனைவரையும் கவர்ந்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P