Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 26 ஏப்ரல் (ஹி.ச.)
காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இடையே சீராக பகிர்ந்து கொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அமைக்கப்பட்டதிலிருந்து இவ்விரு அமைப்புகளும் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, காவிரி நீர்பங்கீடு தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வு காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் 49 முறை கூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளது.
ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்வரத்து, அணைகளின் நீர்மட்டம் மற்றும் பாசன தேவைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA