Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த ஒரு மாதகாலமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தேர்தல் முடிந்துள்ள நிலையில், தற்போது அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய்யும் வரும் மே 4-ம் தேதி ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம்தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இதுகுறித்து, தவெக வட்டாரங்கள் கூறியதாவது:
பொதுவாக விஜய் தனது படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போது, தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள 4-ம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்லக் கூடும் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
எனவே, அன்றைய தினம் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக இருந்தால், தலைவர் வெளிநாடு செல்லும் முடிவைக் கைவிட்டுவிடுவார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P