Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைப் பொது தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4 அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து வாக்குகள் எண்ணும் வழிமுறைகளை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8:00 மணிக்குத் துவங்கும்.
முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டுக்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தபால் வாக்குகள்: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80%) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல் துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sector-ல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.
85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.
இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8:00 வரை பெறப்படும்.
வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b