Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 27 ஏப்ரல் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே உள்ள
சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாயாரம்மாள் (79), கணவர் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று இரவு அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த அவரின் கை, கால்களை கயிற்று கட்டிலுடன் சேர்த்து கட்டியதுடன், வாயில் துணி வைத்து அடைத்து சத்தம் போட முடியாதபடி செய்துள்ளனர்.
பின்னர் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடு மற்றும் 1 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூதாட்டி உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு காவல்துறை சார்ந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டியை நகைக்காக கொலை செய்த இந்த சம்பவம், அந்தப் பகுதியில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam