இறுதி ஊர்வலங்களில் ஒழுங்கு விதிகள் - ஜூலை 31 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை, 27 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை ஆலங்குளம் அருகே, இறுதி ஊர்வலத்தின் போது சாலையில் வந்த கல்லூரி பேருந்தை நிறுத்தி, சிலர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது இந்த உ
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 27 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை ஆலங்குளம் அருகே, இறுதி ஊர்வலத்தின் போது சாலையில் வந்த கல்லூரி பேருந்தை நிறுத்தி, சிலர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

வழக்கின் போது, பொதுச் சாலைகளில் நடைபெறும் இறுதி ஊர்வலங்களின் போது போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்களுக்கு இடையூறு, சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் போன்றவை அதிகரித்து வருவதாக நீதிமன்றம் கவனம் செலுத்தியது.

குறிப்பாக, சாலைகளை முற்றுகையிடுதல், வாகனங்களை தடுத்து நிறுத்துதல், ஒலி மிக்க இசை மற்றும் கூட்ட நெரிசல் போன்றவை பொதுமக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு உள்ளதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து,

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த தேவையான வழிமுறைகள் என்ன, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,

போக்குவரத்து தடைகளை குறைக்கும் திட்டங்கள்,

அவசர சேவைகள் (ஆம்புலன்ஸ், தீயணைப்பு) பாதிக்காத வகையில் ஏற்பாடுகள்

போன்ற அம்சங்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு ஜூலை 31ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், இறுதிச் சடங்குகளை நடத்துவது ஒரு அடிப்படை உரிமையாகும் என்பதால், புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும் போது அந்த உரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.

இந்த உத்தரவு, எதிர்காலத்தில் இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணைகள் வெளியாகும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பொது இடங்களில் சட்டம்-ஒழுங்கை பேணுவதில் காவல்துறையின் பொறுப்பையும் இந்த வழக்கு மீண்டும் முன்வைத்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam