Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் அரசூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இரவு சுபாஷ் வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அவருடைய மனைவியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பிடித்து இழுத்தவாறு கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவருடைய மனைவி கத்தி கூச்சலிடவே, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவர்களுடைய இரண்டரை வயது பெண் குழந்தையை அந்த பெண் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
சுபாஷ் மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், அப்பெண்ணை பிடிக்க முயன்றுள்ளனர். இதை பார்த்த அவர், குழந்தையை கீழே விட்டுவிட்டு ஓடியுள்ளார்
இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை விரட்டிச் சென்ற பொதுமக்களும், வியாபாரிகளும் அவரை பிடித்து வைத்தனர்.
.அப்போது அந்த பெண் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த விஏஓ சுபாஷ், இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு போலீசார் யாரும் வராத நிலையில், அந்த பெண்ணை பொதுமக்களே காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
அதற்குள் தகவலறிந்து வருவாய் துறையினரும், வியாபாரிகள் சங்கத்தினரும் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் வேறு வழியின்றி போலீசார் குழந்தையை கடத்த முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்யப்போவதாக தெரிவித்தனர்.
போலீசார் இந்த மெத்தனப்போக்கை பொதுமக்களும், வியாபாரிகளும் கண்டித்து கோஷமிட்டதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
ஒரு கிராம நிர்வாக அலுவலரின் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைந்து செயினை பறிக்க முயன்றதுடன் குழந்தையையும் கடத்த முயற்சி செய்த சம்பவம் சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN