Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம் , 28 ஏப்ரல் (ஹி.ச.)
விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் கூகுள் ஏஐ டேட்டா சென்டர், 2047-ம் ஆண்டுக்கான “விக்சித் பாரத்” இலக்கை அடைய ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கும் என்று கூகுள் கிளவுட் குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துணைத் தலைவர் பிகாஸ் கோலே தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டும் விழாவுக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காலத்தில் இந்த டேட்டா சென்டர் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
இந்த திட்டத்தின் மூலம் விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உலகளாவிய ஏஐ பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும்.
இதுவரை சர்வதேச கடலடித் தகவல் தொடர்பு மையங்களாக இருந்த மும்பை, சென்னை நகரங்களுக்கு இணையாக தற்போது விசாகப்பட்டினமும் உருவாகும்.
புதிய ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் மூலம் விசாகப்பட்டினம் உலகின் பல பகுதிகளுடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் பாரம்பரிய கடல் வணிக பாதைகள் டிஜிட்டல் வர்த்தக வழித்தடங்களாக மாறும்.
இந்த திட்டத்தில் இணைந்து செயல்படும் அதானி கனெக்ஸ், ஏர்டெல் நெக்ஸ்ட்ரா நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தொழில்துறை மையமாக வளர்ந்து வரும் விசாகப்பட்டினத்திற்கு இந்த டேட்டா சென்டர் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கும்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், மேம்பட்ட கிளவுட் மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களில் பயிற்சியும் வழங்கப்படும்.
மேலும், சுமார் 10 ஆயிரம் பெண்கள் சிறு தொழில்கள் தொடங்குவதற்கு கூகுள் நிறுவனம் ஆதரவு வழங்கும்.
இந்த பகுதியில் மின்சார பாதுகாப்பை உறுதி செய்ய புதிய மின்கம்பி இணைப்புகள் மற்றும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் இந்த டேட்டா சென்டர் அமைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA