Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான சுமார் ஒரு லட்சம் இயந்திரங்கள், 62 மையங்களில் 24 மணி நேரம் மூன்று அடுக்கு பாதுகாப்பில் பாதுகாக்கப்படுகின்றன.
வரும் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பயிற்சி நாளை காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.
கூடுதல் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சியில், ஓட்டு எண்ணும் முறை, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் விதம், தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் பின்னர் தங்கள் மாவட்டங்களுக்கு சென்று, தேர்தல் பணியாளர்களுக்கு இதே பயிற்சியை வழங்க உள்ளனர்.
மேலும், வாக்கு எண்ணிக்கையில் எந்த தவறும் ஏற்படாமல் தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி தெளிவான நடைமுறைகளை கடைப்பிடிக்கவும் இந்த பயிற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் வியாழக்கிழமை சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகளுக்கு தனி பயிற்சி நடைபெறுகிறது.
இதில் தேர்தல் அதிகாரி குமரகுருபரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ